நேரு ஸ்டேடியம் வரை சாலை மார்க்கமாக செல்லும் பிரதமரின் பாதுகாப்புக்காக 22 ஆயிரம் போலீசார் கண்க

நேரு ஸ்டேடியம் வரை சாலை மார்க்கமாக செல்லும் பிரதமரின் பாதுகாப்புக்காக 22 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு

 பிரதமரின் 2 நாள் சுற்றுப்பயணத்தையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குஜராத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு 28-ந்தேதி மாலை 5 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடையும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நேப்பியர் பாலம் அருகில் உள்ள அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை வளாகத்தை சென்றடைகிறார்.  செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகிற 28-ந்தேதி மாலை சென்னை வருகிறார். நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அவர் மறுநாள் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். பிரதமரின் 2 நாள் சுற்றுப்பயணத்தையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குஜராத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு 28-ந்தேதி மாலை 5 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடையும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நேப்பியர் பாலம் அருகில் உள்ள அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை வளாகத்தை சென்றடைகிறார். அங்கிருந்து செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கத்துக்கு காரில் புறப்பட்டு செல்கிறார். வழிநெடுக பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பிரதமர் வருகையையொட்டி வருகிற 28 மற்றும் 29 ஆகிய 2 நாட்களும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது. என்.எஸ்.ஜி. என்று அழைக்கப்படும் தேசிய பாதுகாப்பு படையினர், மத்திய-மாநில உளவு பிரிவு போலீசார், உள்ளூர் போலீஸ் அதிகாரிகள், ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு படை போலீசார் என 5 காவல் அடுக்காக நின்று மத்திய-மாநில போலீசார் பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கிறார்கள். சென்னையில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். நேரு ஸ்டேடியம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. ஐ.என்.எஸ். வளாகத்தில் இருந்து நேரு ஸ்டேடியம் வரை சாலை மார்க்கமாக செல்லும் பிரதமரின் பாதுகாப்புக்காக 18 ஆயிரம் போலீசாரும், விழா நடைபெறும் நேரு ஸ்டேடியத்தில் 4 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இதே போன்று கிண்டி கவர்னர் மாளிகையில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் வரையில் பிரதமர் செல்லும் சாலைகளிலும் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பிரதமரின் வருகையையொட்டி விமான நிலைய அதிகாரிகள், போலீசார், வருவாய் அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் சென்னை விமானநிலையத்தில் இன்று பிற்பகலில் நடைபெற உள்ளது. பிரதமரின் சுற்றுப் பயணத்தையொட்டி வருகிற 28 மற்றும் 29 ஆகிய 2 தேதிகளிலும் சென்னை மாநகரில் டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அடையாறு ஐ.என்.எஸ். முதல் நேரு ஸ்டேடியம் வரையிலும், கவர்னர் மாளிகையில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் வரையிலும் பாதுகாப்பு ஒத்திகையை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த ஒத்திகை நாளை அல்லது நாளை மறுநாள் நடத்தப்பட உள்ளது. டெல்லியில் இருந்து மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் இன்று அல்லது நாளை சென்னை வருகிறார்கள். அவர்கள் விழா நடைபெறும் இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்கள். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையிலும் ஈடுபட உள்ளனர். 28-ந்தேதி மாலையில் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி கவர்னர் மாளிகைக்கு சென்று தங்குகிறார். இதையொட்டி கவர்னர் மாளிகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி கடந்த மே மாதம் சென்னை வந்து நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தற்போது 3 மாதத்தில் 2-வது முறையாக சென்னை வர உள்ளார். பிரதமர் மோடிக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதா கட்சியினர் செய்து வருகிறார்கள். தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி ஒயிலாட்டம், சிலம்பாட்டம் போன்றவற்றுடன் கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தமிழக பா.ஜனதா கட்சியினர் திட்டமிட்டு உள்ளனர்.

 

Related News