ஒரு வாரமாக மருத்துவமனையில் இருந்த ஓ.பி.எஸ். நாளை வீடு திரும்புகிறார்
கடந்த ஒரு வாரமாக அவருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கொரோனா தொற்று பாதிப்பால் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 15-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வாரமாக அவருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போடுவதற்காக கொரோனா கவச உடையில் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். வாக்களித்த பிறகு அவர் மீண்டும் மருத்துவமனைக்கு சென்றார். டாக்டர்களின் தீவிர கண்காணிப்பு, மருத்துவ சிகிச்சையின் மூலம் அவரது உடல் நலம் நன்றாக தேறியது. அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ததில் 'நெகட்டிவ்' என முடிவு வந்தது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார். திங்கட்கிழமை முதல் அவர் கட்சி பணியில் தீவிரமாக ஈடுபடுவார் என அவரது ஆதரவாளர் ஒருவர் தெரிவித்தார்.