அரசு மருத்துவர் வீட்டில் 200 சவரன் நகைகள் கொள்ளை, 3 தனிப்படைகள் அமைப்பு
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அடுத்தடுத்த வீடுகளில் மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். அரசு மருத்துவரின் வீட்டில் பூட்டை உடைத்து 200 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. மருத்துவரின் வீட்டிற்கு அருகில் உள்ள 4 வீடுகளின் பூட்டையும் உடைத்து 10 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளன. அங்கிருந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொள்ளை நடந்த வீடுகளில் பதிவாகியிருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மருத்துவரின் வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை காவல்துறை ஆய்வு செய்கின்றனர். இந்த கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்வதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றப்பிரிவு போலீசார் அடங்கிய ஒரு தனிப்படையும், அன்னவாசல் இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு தனிப்படையும், இலுப்பூர் இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தனிப்படை போலீசார், அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.