காவிரியில் தண்ணீர் திறப்பு 37 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது

காவிரியில் தண்ணீர் திறப்பு 37 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது

நீர்வரத்து அதிகமாக உள்ளதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், காவிரிகரைக்கு செல்லவும் 14-வது நாளாக தடை நீடிக்கிறது. பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றின் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் தமிழக-கர்நாடக எல்லையை கடந்து ஒகேனக்கலுக்கு வருகிறது. ஒகேனக்கலுக்கு நேற்று முன்தினம் மாலை 28 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 43 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து அதிகமாக உள்ளதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், காவிரிகரைக்கு செல்லவும் 14-வது நாளாக தடை நீடிக்கிறது. பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றின் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 42 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து வினாடிக்கு 35 ஆயிரத்து 237 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று காலை தண்ணீர் திறப்பு 37 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. கால்வாயில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணையில் இருந்து மொத்தம் மொத்தம் 37 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரியில் தொடர்ந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 120.49 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 120.25 அடியாக சரிந்தது. விடுமுறை நாளான இன்று கடல் போல காட்சி அளிக்கும் மேட்டூர் அணையையும், காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீரையும் பார்க்க ஏராளமானோர் மேட்டூர் அணை மற்றும் காவிரி கரையில் திரண்டுள்ளனர். இதையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.