கள்ளக்குறிச்சி உயிரிழந்த பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு



இந்நிலையில், மாணவி ஸ்ரீமதியின் உடல் இன்று காலை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி கடந்த 13 ஆம் தேதி உயிரிழந்தார். இது குறித்த வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், இன்று காலை 6 முதல் 7 மணிக்குள் மாணவியின் உடலை பெற்றோர்கள் பெற்று கொள்ள வேண்டும், இன்று மாலை 6 மணிக்குள் இறுதிச் சடங்குகள் நடத்த வேண்டும் என தெரிவித்தார். நேற்றைய விசாரணையின்போது மாணவியின் உடலை பெற்றுக் கொள்வதாக நீதிமன்றத்தில் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில், மாணவி ஸ்ரீமதியின் உடல் இன்று காலை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புக்கு இடையே மாணவியின் உடலை பெற்றுக்கொண்டனர். வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி, மத்திய மண்டல ஐஜி சந்தோஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் உடல் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாணவியின் உடல் கொண்டு செல்லப்படுகிறது. மாணவியின் உடலுக்கு அவரது சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் இன்று இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. மாணவியின் இறுதி ஊர்வலத்தில் உறவினர்களும் உள்ளூர் மக்களும் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்றும், காவல்துறை தெரிவித்துள்ளது. வெளி ஆட்களோ, பிற அமைப்புகளோ இதில் பங்கேற்கக் கூடாது என்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.