திருமணம் நடத்த திருமணமாகாதவர் சான்றிதழ் போதும்- அமைச்சர் சேகர்பாபு தகவல்

திருமணம் நடத்த திருமணமாகாதவர் சான்றிதழ் போதும்- அமைச்சர் சேகர்பாபு தகவல்

இனி வருங்காலங்களில் கோவில்களில் திருமணம் நடத்திட விரும்பும் பொதுமக்கள் "திருமணமாகாதவர்" என சான்றினை இ-சேவை மையங்கள் மூலம் பெற்று சம்பந்தப்பட்ட கோவில்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கு அனுமதி பெற இதுவரை இதர சான்றிதழ்களுடன் "முதல் திருமண சான்றும்" கோரப்பட்டு வந்தது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையானது "முதல் திருமண சான்றுக்கு" பதிலாக இ-சேவை மையங்கள் வாயிலாக வழங்கப்படும் "திருமணமாகாதவர்" என்ற சான்றினை பெற்றுக்கொள்ள தெளிவுரை வழங்கியுள்ளது. ஆகவே, இனி வருங்காலங்களில் கோவில்களில் திருமணம் நடத்திட விரும்பும் பொதுமக்கள் "திருமணமாகாதவர்" என சான்றினை இ-சேவை மையங்கள் மூலம் பெற்று சம்பந்தப்பட்ட கோவில்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதுகுறித்து கோவில்களின் அலுவலர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்சேகர்பாபு தெரிவித்துள்ளார். கோவில்களில் திருமணம் நடத்திட அனுமதி வழங்குவதற்கு உரிய சான்றிதழ்களை தவிர வருவாய் துறையால் வழங்கப்படாத இதர சான்றிதழ்களை கோரினால் அறநிலையத்துறையின் தலைமை அலுவலக தொலைபேசி (044-28339999) எண்ணினை தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.