புட்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஏரியில், கழிவுநீர் கலப்பதினால் ஏராளமான மீன்கள் செத்து

 

 

திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுகுமார், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆவர். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி, புட்லூர் ஏரி மீன் ஏலத்தில் பங்கெடுத்துள்ளார்.ஏலத்தொகை ரூ.5 லட்சத்து 41 ஆயிரத்துடன் சரக்கு சேவை வரி உள்பட மொத்தம் 6 லட்சத்து 5 ஆயிரத்து 920 ரூபாய்க்கு ஒரு வருடகாலம் ஏரியில் மீன் வளர்க்கும் உரிமையை எடுத்துள்ளார்.ஆனால், ஏலம் எடுத்த ஒரு மாதத்திற்குள் ஊரடங்கு அமலுக்கு வந்ததால், ஏரியில் உள்ள மீன்களைப் பிடித்து விற்பனை செய்ய அவரால் முடியவில்லை. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, கடந்த 10 நாள்களாக தான் ஏரியில் மீன்களைப் பிடித்து சில்லரை விற்பனை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 3 நாள்களாக ஏரியில் அதிகளவில் மீன்கள் செத்துமிதந்து அழுகி துர்நாற்றம் வீசி வருகிறது. இது குறித்து சுகுமார் கூறுகையில், "ஏலம் எடுத்து நான்கு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை சுமார் 20 ஆயிரம் மதிப்பிலான மீன்கள் மட்டுமே பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.கழிவுநீர் கலப்பதால் செத்து மிதக்கும் மீன்கள்பல மாதங்களாகவே மீன்கள் அதிகளவில் இறப்பதைக் காணமுடிந்தது. இதற்குக் காரணம், கழிவுநீர் ஏரியில் கலப்பது தான் பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் எடுத்துக்கூறினேன். ஆனால், அலுவலர்களின் அலட்சியப்போக்கால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த மூன்று நாள்களில் மட்டுமே 3 டன் அளவிலான மீன்கள் செத்து ஏரியில் மிதக்கிறது. அப்பகுதியே துர்நாற்றம் வீசுகிறது. இந்த ஏலத்தினால் எனக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை நஷ்டம் தான் ஏற்பட்டுள்ளது.எனவே, மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ஏரியில் நகராட்சி கழிவு நீர் கலப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும். உள்ளூர் மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரியை அசுத்தப் படுத்தாமல் காத்து ஏரியில் மீன் இறக்கும் நிலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார்.

Related News