கன்னியாகுமரியில் கனமழை - குழித்துறை தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!


கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று (ஜூலை.09) இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.

நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குழித்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் கனமழையும், மற்ற இடங்களில் பரவலான மழையும் பெய்துவருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக களியல் பகுதியில் 110 மிமீ மழை பதிவாகியுள்ளது. இதேபோன்று குழித்துறையில் 104 மிமீ மழையும், ஆனைகிடங்கு, அடையா மடை பகுதிகளில் தலா 73 மிமீ மழையும், கன்னியாகுமரில் 74 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. மலையோர பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 1,466 கனஅடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 944 கனஅடி தண்ணீரும் வந்து கொண்டுடிருக்கிறது.
வெள்ள அபாய எச்சரிக்கை
பேச்சிப்பாறை அணையிலிருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 84 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் குழித்துறையாறு, தாமிரபரணி ஆறு உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குழித்துறை தாமிரபரணி ஆறு, கோதையாறு, வள்ளியாறு உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.