நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கூடுதல் வசூல்... அலுவலர்கள் விசாரணை

 


திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அடுத்த கச்சூரில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக நெல் மூட்டைக்கு 40 ரூபாய் வசூலிக்கப்படுவதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சென்னை பிரிவு 2, காவல் துணை கண்காணிப்பாளர் லாவகுமார், திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆய்வுக்குழு அலுவலர்கள் தலைமையில் 10 பேர் கொண்ட அலுவலர்கள் அங்கு திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில், கணக்கில் வராத 25 ஆயிரத்து 880 ரூபாய் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் நேரடி கொள்முதல் நிலையத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்த சுந்தரராஜன், நரேஷ் ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.