சென்னை: தமிழ்நாடு ஆளுநர் பன்வரிலால் புரோஹித் நாளை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார்.
திமுக தலைமையிலான அரசு பதவியேற்ற பின் முதன்முறையாக தமிழ்நாடு ஆளுநர் பிரதமரை சந்திப்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை பாதிப்பு குறைந்து வருகின்ற நிலையில் சில மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. கரோனா நிலவரம், நீட் விவகாரம், 7 பேர் விடுதலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் நாளைய சந்திப்பின் போது ஆலோசிக்கப்பட இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் இரண்டு மாத கால செயல்பாடுகள் குறித்த அறிக்கையை நாளை ஆளுநர் சமர்பிக்க இருக்கிறார். இந்த சந்திப்புக்காக இரவு 10 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆளுநர் இண்டிகோ தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். தமிழ்நாடு ஆளுநர் மாற்றப்படலாம் என தகவல் பரவி வரும் நிலையில், இச்சந்திப்பு நேரவுள்ளது குறிப்பிடத்தக்கது.